தினகரன் எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள புதுவை ரிசார்ட் முற்றுகை- தினகரன் கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட் நோக்கி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி : டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் சின்னவீராம்பட்டினம் தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட் முன்பு அதிமுகவினர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஆளுநருக்கு கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சின்னவீராம்பட்டினத்திலுள்ள தி விண்ட் ஃப்ளவர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை முதல் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு தங்கியுள்ளனர். எதிர் அணியினர் ஆதரவு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துவிடக் கூடாது என்பதற்காக தினகரன் தரப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தலைமையிலான அதிமுகவினர் கட்சிக் கொடியேந்தி ரெசார்ட் நோக்கி பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களை பேரிகாட் வைத்து தடுத்து நிறுத்தினர். எனினும் தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு சென்ற அதிமுகவினர் டிடிவி. தினகரனின் படங்களை கையில் வைத்துக் கொண்டு அவற்றை காலணியால் அடித்ததோடு தீ வைத்தும் கொளுத்தினர்.
எனினும் ரிசார்ட் நுழைவு வாயில் அருகே போலீசார் பேரிகாட் அமைத்ததால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் பேரிகாட் மீது ஏறி நின்று ஓம்சக்தி சேகர் தினகரனை கடுமையாக விமர்சித்தார். ரிசார்ட்டில் தங்கியிருப்பவர்கள் வெளியே வரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஓம்சக்தி சேகர், சசிகலா ஒழிக, தினகரன் ஒழிக என்று கோஷங்களை எழுப்ப அதிமுகவினர் அதனை கூறினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications