ஜெ.வீடியோ விவகாரத்திலும் வெடிக்கும் சசி குடும்ப ஈகோ 'வார்' கிருஷ்ணபிரியா பேட்டிக்கு ஜெயானந்த் பதிலடி
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வைத்தும் சசிகலா குடும்பத்துக்குள் ஈகோ யுத்தம் வெடித்துவிட்டது,
Recommended Video
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை முன்வைத்து இப்போது சசிகலா குடும்பத்துக்குள் பஞ்சாயத்து வெடித்து வீதிக்கு வந்துவிட்டது.
தினகரனிடம் கொடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேலிடம் தினகரன் கொடுத்திருந்தார்; அதை வெற்றிவேல் வெளியிட்டது துரோகம் என கொந்தளித்தார் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா. வெற்றிவேல் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எகிறினார் கிருஷ்ணப்பிரியா.
முன்னதாக ஃபேஸ்புக்கில் கிருஷ்ணப்பிரியா கொந்தளித்திருந்தார். கிருஷ்ணப்பிரியா பேட்டி கொடுத்த உடனேயே சென்னையில் உள்ள தமது இல்லத்துக்கு சில ஊடகங்களை திவாகரன் மகன் ஜெயானந்த் வரவழைத்து பேட்டி தந்திருக்கிறார்.
சசி கோபிக்கமாட்டார்
அந்த பேட்டியில், வெற்றிவேல் செய்தது சரிதான்; வீடியோவை வெளியிட்டதால் சசிகலா வருத்தப்படமாட்டார்; அதிமுக தொண்டர்கள் நிம்மதி அடைவார்கள் என பேட்டி தந்திருக்கிறார். கிருஷ்ணப்பிரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் ஜெயானந்த் இப்பேட்டியையே தந்திருக்கிறார்.
முந்திய தினகரன்
சசிகலா சிறைக்கு போன பின்னர் அவரது குடும்பத்தில் அரசியல் ரீதியாக தலையெடுப்பதற்கு ஆள் ஆளுக்கு போட்டியிடுகின்றனர். இதில் தினகரன் ரேஸில் முந்திக் கொண்டே இருக்கிறார்.
ஜெயானந்த் தனி ஆவர்த்தனம்
அவரை வீழ்த்த இளவரசி குடும்பத்தின் விவேக்கும் கிருஷ்ணப்பிரியாவும் ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறார்கள். இளவரசி குடும்ப வாரிசுகள் எதை செய்தாலும் அதற்கு போட்டியாக தினகரனுக்கு ஆதரவாக திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலடி கொடுத்து வருகிறார்.
ஈகோ யுத்தம்
ஜெயலலிதா வீடியோ விவகாரத்திலும் இது தொடருகிறது. ஃபேஸ்புக்கில் தொடங்கிய இந்த ஈகோ யுத்தம் இப்போது பகிரங்கமாக மீடியாக்களிலும் வெடித்து சந்தி சிரிக்கிறதே என ஆதங்கப்படுகின்றனர் மன்னார்குடி உறவினர்கள்.