சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 8 போலீசார் “டிஸ்மிஸ்”!
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் சிக்கிய 8 போலீசார் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுவையில் போலீசாரிடம் 5 பேர் கொண்ட விபசார கும்பல் சிக்கியது.
விபசார கும்பலில் 2 சிறுமிகள் இருந்தனர். இவர்களில் 14 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமி குழந்தை பெற்று இருந்தாள். சிறுமிகளை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஒரு கும்பல் தள்ளியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு புதுவை சி.ஐ.டி போலீசார் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.ஐ.டி போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
விபசார கும்பலில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. இந்த டைரியில் விபசாரத்தில் தள்ளப்பட்ட சிறுமிகள் விபரம், விபசாரத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. அதோடு சில போலீஸ் அதிகாரிகள் பெயரும் இடம் பெற்று இருந்தது.
இதனை தொடர்ந்து சி.ஐ.டி போலீசார் சிறுமிகளிடம் உல்லாசம் அனுபவித்தது யார் என விசாரணை நடத்தினார்கள். இதில் போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கில் போலீஸ் ஐ.ஜி.பர்வீர்ரஞ்சன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இதில் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் செல்வக்குமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர்கள் விஜயகுமார், சங்கர் ஆகிய 8 பேரை பணியிடை நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கில் தொடர்புடைய போலீசாரை கண்டறிய வீடியோ கான்பரன்சிங் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அந்த அணிவகுப்பில் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார் தவிர மேலும் சில போலீசாரும் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 போலீஸ்காரர்களில் காவலர் விஜயகுமாரை மட்டும் சிறுமிகள் அடையாளம் காட்டவில்லை. மற்ற 7 பேருடன் மற்றொரு சப் இன்ஸ்பெக்டரான பாட்ஷா என்பவரை அடையாளம் காட்டினார்கள். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பாட்ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்படடுள்ளது. ஆனாலும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய போலீசாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் அரசை வலியுறுத்தின. மேலும், தலைமறைவாக உள்ள போலீசாரை கைது செய்யாதது குறித்து விமர்சனங்களும் எழுந்தன.
இதையடுத்து சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, ஏட்டுகள் செல்வக்குமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர் சங்கர் ஆகிய 8 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை புதுவை போலீஸ் ஐ.ஜி பிரவீர்ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications