பரிதாபம்.. உடன் பிறந்த தம்பியை ஓட ஓட நடுரோட்டில் விரட்டி குத்தி கொன்ற அண்ணன்
உடன்பிறந்த தம்பியையே அண்ணன் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
அறந்தாங்கி: குடும்ப தகராறு காரணமாக அண்ணனே உடன் பிறந்த தம்பியை கத்தியால் ஓட ஓட விரட்டி கொன்ற சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி அருகே உள்ளது நாயக்கர்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி, மற்றும் கணேசன், 38. இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இருவருமே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். ஒரே ஓட்டலில் வேலை பார்த்தாலும் பேசிக் கொள்வது கிடையாது. ஏனென்றால், இருவரிடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வருகிறது. அதனால் அடிக்கடி தகராறிலும் இறங்கிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

வழக்கம்போல் இரண்டு பேரும் இன்று வேலைக்கு சென்றனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி, தன் தம்பி கணேசனை குத்த, கத்தியை எடுத்தார். இதனை கண்ட கணேசன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓட ஆரம்பித்தார். ஆனாலும் வெள்ளைச்சாமி விடாமல் கணேசனை துரத்தி சென்றார்.
பின்னர் விரட்டி பிடித்த கணேசனை, வெள்ளைச்சாமி நடுரோட்டில் வைத்து கத்தியால் சரமாரியாக குத்தினார். பல இடங்களில் கத்திகுத்து பட்ட கணேசன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். பட்டப்பகலிலேயே தங்கள் கண்முன்னே நடைபெற்ற இந்த கோர சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து பயந்து ஓடினர்.
தகவலறிந்து வந்த அறந்தாங்கி போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளைச்சாமியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடன்பிறந்த தம்பி என்றும் பாராமல், நடுரோடு என்றும் பாராமல், பொதுமக்கள் உள்ளனர் என்பதையும் பொருட்படுத்தாமல் பட்டப்பகலில் நடந்த வெறிச்செயல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications