‘ஓட்டுப்போடு...’ ராப் பாடல் பாடி ஓட்டுக் கேட்கும் தேர்தல் ஆணையம்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராப் பாடல் சிடியை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார்.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை அமைதியாகவு, நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு இம்முறை 100 சதவீத வாக்குப்பதிவை நடத்திக்காட்டவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது தேர்தல் ஆணையம்.
இதற்கென பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம். அதன்படி, தற்போது தேர்தல் விழிப்புணர்வு தேர்தல் விழிப்புணர்வு ராப் பாடலை வெளியிட்டுள்ளது.

ராப் பாடல்...
இந்தப் பாடலை ‘ராப்' பாடல் புகழ் பிளாசே மற்றும் பால் ஜேக்கப் ஆகியோர் பாடலை தயாரித்துள்ளனர். இதற்கான சி.டி. வெளியிடும் நிகழ்ச்சி தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

ராஜேஷ் லக்கானி...
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இந்த சி.டி.யை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "ராப் பாடலை இளைய சமுதாயத்தினர் விரும்பி கேட்பார்கள். எனவே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இளையசமுதாயத்தினரை குறி வைத்து இந்த ‘ராப்' பாடலை பிளாசே மற்றும் பால் ஜேக்கப்ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஓட்டுப்போடு...
சுதந்திர தாகம், வாக்களிக்கும் நேரம் இது, ஓட்டுப்போடு ஓட்டுப்போடு 100 சதவீதம் ஓட்டுப்போடு என்ற வரிகளுடன் பாடல் தொடங்குகிறது.

வீடுகளுக்கே சென்று...
இந்த சி.டி. இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடியது. குடிசைப்பகுதிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி என எல்லா இடங்களுக்கும் சென்று இந்த பாடலை அவர்கள் எடுத்துள்ளனர்.

விரைவில்...
இந்த பாடல்கள் தேர்தல் கமிஷன் இணையதளம், உள்ளூர் சேனல்கள், சினிமா தியேட்டர்கள், சமூக வலைதளங்கள் மூலம் விரைவில் ஒளிபரப்பப்படும்.

புதிய பாடல்கள்...
பிளாசே மற்றும் பால் ஜேக்கப் ஆகியோர் ஒரு நிமிடம் ஓடக்கூடிய பாடல்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.கிர்லோஷ்குமார், பிளாசே மற்றும் பால்ஜேக்கப் ஆகியோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications