மதுசூதனன் ஒப்புதல் பேரிலேயே ஜெ. கைரேகை ஏற்பு... ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்!
அதிமுக அவைத்தலைவர் ஒப்பதல் பேரிலேயே ஜெயலலிதாவின் கைரேகை பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய முதன்மை செயலர் வில்ஃப்ரெட் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதல் அளித்தன் பேரிலேயே ஜெயலலிதாவின் கைரேகை பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்ஃப்ரெட் ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
முதன்மைச் செயலர் நேரில் வருகை
எனவே இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்காக மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்ஃப்ரெடு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதிகாரி விளக்கம்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்பட 3 தொகுதிக்கான தேர்தலில் வேட்பாளர்கள் முன்மொழிவு பத்திரத்தில் பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் கைரேகை பதிவிற்கு அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி
மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரிலேயே ஜெயலலிதாவின் கைரேகைப் பதிவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாகவும் மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்ஃப்ரெட் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளார். தமிழகத் தேர்தல் வெற்றிகளை எதிர்த்து, இதுவரை நூற்றுக்கணக்கான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு தேர்தல் வழக்கிலும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதன் முதன்மைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை.
டாக்டர் பாலாஜியிடம் விசாரணை
இந்நிலையில் முதன்முறையாக டெல்லியில் இருந்து வந்து முதன்மைச் செயலர் ஒருவர் இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே அப்பல்லோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை யாருமே பார்க்க முடியாத போது அவரைப் பார்த்து அவரிடம் கைரேகை பெற்று அதற்குச் சான்றாவணம் அளித்த டாக்டர் பாலாஜியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் சரவணன் இன்று இன்னொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
அடுத்த கட்ட விசாரணையின் போது
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஜெயலலிதா கைரேகை வழக்கில் மருத்துவர் பாலாஜி ஆஜராக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையான அக்டோபர் 27ம் தேதியன்று மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஜெயலலிதாஉடல்நிலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கே சிபாரிசு செய்த மதுசூதனன், பிறகு, பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.