தேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்!
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கடும் பீதி அடைந்துள்ளன.
தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும், அதன்படி அந்தக் கட்சிகள் தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் வெற்றி பெறும் இடங்கள் ஆகியவற்றை பொறுத்து மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகள் என்று தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கும்.
எனவே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதை அரசியல் கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன.
இந்தியாவில் 1,900 பதிவுபெற்ற அரசியல் கட்சிகள் உள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சிகளில், 400 கட்சிகள் ஒருமுறை கூட தேர்தலில் போட்டியிடவில்லை.
அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளுக்கு வருமான வரி கட்டத் தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அதனைப் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இதனால் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் குறித்த அறிக்கை அளிக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசியல் கடசிகள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.