செங்கோட்டை மகளிர் சுய உதவிக் குழுவுக்குக் கொண்டு வரப்பட்ட ரூ. 3.95 லட்சம் பறிமுதல்
செங்கோட்டை: விழுப்புரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவின் தலைமையகத்திலிருந்து செங்கோட்டையில் உள்ள அதன் கிளை அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்ட ரூ. 3.95 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரத்தில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக் குழு செங்கோட்டையில் கிளை வைத்துள்ளது. இது நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று காலையிலிருந்து இந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் எஸ் வங்கியிலிருந்து ரூ. 3.95 லட்சம் பணத்தை டிரா செய்து கொண்டு சென்றனர்.

அவர்களை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி ஜான் கென்னடி தலைமையிலான பறக்கும் படையினர், இலத்தூர் வள்ளியம்மாள் புரம் என்ற இடத்தில் மறித்து சோதனை நடத்தினர்.

இந்தப் பணம் குறித்த ஆவணங்களைக் கேட்டபோது அது மும்பையில் இருப்பதாக பணத்துடன் வந்தவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து உரிய ஆவணங்களைக் கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு கூறி அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து சென்றனர்.
கடந்த சில நாட்களில் தேர்தல் பறக்கும் படையினரால் செங்கோட்டையில் பணம் பறிமுதல் செய்யப்படுவது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு ஒரு இடத்தில் ரூ. 2.5 லட்சம் பணமும், நேற்று ரூ. 88,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications