சென்னையில் அதிமுக பிரமுகரிடம் இருந்து ரூ.4.8 கோடி பணம் பறிமுதல்
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ.4.8 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகிருஷ்ணசாமி. இவர் தஞ்சை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலராக பதவி வகித்து வருகிறார்.
அவர் கோடி கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் அலுவலர் சங்கீதா மற்றும் வருமான துறை இணை இயக்குனர் சஞ்சய் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் அந்த அடுக்கமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
சோதனையில் 2 பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மேலும் சுமார் 4 கோடியே 80 லட்சம் பணம் சிக்கியது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.