முதல்வர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனை! புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்குள் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை போல, புதுச்சேரிக்கும் வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ்-திமுக கூட்டணி, அதிமுக ஆகிய கட்சிகள் இடையே அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், பணம், பரிசு பொருட்கள், கதிர்காமம் பகுதியிலுள்ள, முதல்வர் ரங்கசாமியின் இல்லத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், பறக்கும்படையினருக்கு யாரோ தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் சுமார் 5 வாகனங்களில், இன்று மதியம் 2 மணியளவில் ரங்கசாமி வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். வாகன நிறுத்துமிடம், மாடிப்படிக்கட்டு பகுதிகளில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
சுமார் 10 நிமிட காலம் சோதனை நடத்தியும், எந்த ஆவணத்தையும், பரிசு பொருளையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர்.
ரங்கசாமி வீட்டில் இருந்தோருக்கு முதலில் அது பறக்கும்படை அதிகாரிகள் என்பதே தெரியாதாம். சோதனை நடத்த ஆரம்பித்த பிறகே அதுகுறித்து தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடைபெற்றபோது, ரங்கசாமி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
முதல்வர் வீட்டிலேயே பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications