வராத கரண்ட் ஓவராக வந்ததால் வெடித்த டிவி, பிரிட்ஜ் – அலறிய மக்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிவி, பிரிட்ஜ் ஆகியவை தீப்பிடித்து எரிந்து, வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் நேற்று மாலை 5.30 மணியளவில் மத்தூர் கிராமத்தில் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த டி.வி., மற்றும் பிரிட்ஜ், மின்சார மீட்டர் ஆகியவை தீப்பிடித்து எரிந்து, வெடித்தன.
இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த கிராமங்களில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த உயர் மின் அழுத்தம் காரணமாக டிவி, பிரிட்ஜ், மின்சார மீட்டர் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து அவசர அவசரமாக மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் சப்ளை நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் மின் அழுத்தம் சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் இரவில் பொதுமக்கள் அச்சத்துடனே இருந்தனர்.