சென்னை புற நகருக்கு கரண்ட் வர இன்னும் 3 நாள் ஆகும்.. அமைச்சர் தங்கமணி
சென்னையில் 90 சதவீதம் அளவுக்கு மின் வினியோகம் சீரமைக்கப்பட்டுவிட்டதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் மின் வினியோகம் 90 சதவீதம் சீர் செய்யப்பட்டுவிட்டது என்று அத்துறை அமைச்சர் தங்கமணி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வர்தா புயலால் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் வினியோகத்தை முழுமையாக சீரமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போர்க்கால அடிப்படையில் பணி செய்ததன் காரணமாக, சென்னையில் மின் வினியோகம் 90 சதவீதம் சீர் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் 3 நாட்களில் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மின்சார விநியோகம் முழுமையாக சீர்செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் வர்தா புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளின் மின்தடை ஏற்பட்டது. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், மின்துறை ஊழியர்களும் கடந்த இரு தினங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.