மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்.. அமைச்சர் தங்கமணி கோரிக்கை
மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை வைத்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கோரிக்கை வைத்து இருக்கிறார்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.
எனவே தமிழக மின்வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கூறினார்கள். இதற்காக தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு ஊழியர்களை அழைத்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 12ம் இதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சு வார்த்தையில் சரியான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மீண்டும் 15-ம் தேதி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிஐடியு மாநில தலைவர் சுப்பிரமணியன் குறிப்பிட்டு இருந்தார்.
இதிலும் உடன்பாடு ஏற்படாததால் நாளை சில மின்வாரிய சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இதுகுறித்து அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்துள்ளார்.
அதில் ''மின்வாரிய ஊழியர்களுடன் புதன்கிழமைக்குள் பேச்சுவார்த்தை நடத்துவோம். மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். மின்வாரிய சங்கங்கள் அரசியல் தூண்டுதலால் நாளை வேலை நிறுத்தம் செய்கிறது'' என்றுள்ளார்.
மேலும் ''பேச்சுவார்த்தையில் பங்கேற்காமலேயே வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யாராவது மின்வெட்டு ஏற்படுத்தினால் அரசிடம் மக்கள் புகாரளிக்கலாம்'' என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.