”டேய் அவ எனக்குத்தான்” – பெண் யானைக்காக நடந்த சண்டையில் 10 வயது ஆண் யானை மரணம்
கோவை:கோவையில் பெண் யானையை கவர ஆண் யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் 10 வயதான ஆண் யானை ஒன்று பரிதாபமாக மரணம் அடைந்தது.
கோவை மாவட்டம் பேரூரை அடுத்த ஆறுமுகக்கவுண்டனூர் அருகே விவசாயத் தோட்டங்களை அடுத்துள்ள வனப்பகுதியில் புதன்கிழமை அதிகாலை காட்டு யானைகள் நடமாடியுள்ளன. அப்போது, இரு ஆண் யானைகளுக்கு இடையே கட்டும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது தலை, துதிக்கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாவட்ட வன அலுவலர் செந்தில்குமார், வனச்சரகர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பிறகு உயிரிழந்த யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டன.
கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உயிரிழந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். பிறகு, அந்த யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் மனோகரன், "தற்போது யானைகள் இடம் பெயரும் காலம் என்பதாலும், இனப்பெருக்க காலம் என்பதாலும் பெண் யானைகளை ஈர்ப்பதில் ஆண் யானைகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதேபோல், இப்பகுதியில் இரு ஆண் யானைகளுக்கு இடையே மோதல் நடைபெற்றதாலேயே இந்த யானை இறந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.