சேலத்தில் டாஸ்மாக் கடை எரிப்பு- ஊழியர் மரணத்தால் பதற்றம்: முற்றுகைப் போராட்டம்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காவல்துறையினரின் மிரட்டல் தான் காரணம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். உயிரிழந்த ஊழியருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி குமரி முதல் சென்னைவரை போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைப்பது, தீவைப்பது என பதற்றமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்குட்பட புதுப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் பெயர் செல்வம், தலைவாசலை அடுத்த நாவலூரை சேர்ந்த இவர், செவ்வாய்கிழமையன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு கடைக்குள் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சில மர்ம நபர்கள் அந்த கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதை தொடர்ந்து அந்த கடை தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைக்குள் இருந்த மது பாட்டில்கள் வெடித்து சிதறி மேலும் தீ பரவி இருக்கிறது. இதனால், கடை முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு ஊழியர் செல்வம் உயிருக்கு போராடி இருக்கிறார். தீப்பற்றி எரியும் கடைக்குள் இருந்து வெளியே வர முடியாத செல்வம், சக பணியாளர்களுக்கு செல்போன் மூலம் பேசி தன்னை காப்பாற்றும்படி கதறி இருக்கிறார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டாஸ்மாக் பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே டாஸ்மாக் பணியாளர்கள், கடைக்குள் மயக்க நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து டாஸ்மாக் மண்டல் முதுநிலை மேலாளர் தியாகராஜன், சேலம் மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) பிரபாகரன், சேலம் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த சில தினங்களாக டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கடைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இரவு நேரங்களிலும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அந்தந்த பகுதி காவல்துறையினர் மிரட்டுகின்றனர். மேலும், காவல்துறையின் மிரட்டல் காரணமாக கடையில் உறங்கிய செல்வம், மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு உயிரிழந்துள்ளார்.
டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக இதுவரை எந்த வித புகாரும் பதிவு செய்யப்படவில்லை. போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு காரணமாகவே அநியாயமாக ஒரு உயிர் பலியாகியிருக்கிறது. வன்முறைக்கு உயிரிழந்த செல்வத்திற்கு ப்ளஸ் 2 படிக்கும் பெண்ணும், ப்ளஸ் 1 படிக்கும் பையனும் இருக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த செல்வம் வாரம் ஒருநாள் மட்டுமே சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.
வாய்மொழி உத்தரவு
டாஸ்மாக் கடையில் அடிக்கடி திருடுபோவதால் ஊழியர்கள் கண்டிப்பாக தங்கவேண்டும் இல்லையென்றால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. போலீசாரும் ஊழியர்கள் கடைகளில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுதான் செல்வம் உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த ஊழியரைப் பற்றி இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
முற்றுகையிட்ட ஊழியர்கள்
உயிரிழந்த செல்வத்தின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. உடலை பார்வையிடுவதற்காக டாஸ்மாக் மண்டல முதுநிலை மேலாளர் தியாகராஜன் அரசு மருத்துவமனைக்கு வந்தார், அப்போது அவரை முற்றுகையிட்ட ஊழியர்கள், செல்வத்தின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கடையடைப்பு நடத்த முடிவு
இதனிடையே டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இன்று சேலம் மாவட்டத்தில் 250 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை ஒருங்கிணைத்து ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
உயிருக்கு பாதுகாப்பு இல்லை
எந்த காரணத்தைக் கொண்டும் இனிமேல் கடைக்குள் தங்கமாட்டோம் என்றும், கடைக்கு பாதுகாப்பு போட்ட அரசு, ஊழியர்களின் உயிருக்கு பாதுகாப்பு தர மறுத்தது ஏன் என்று ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சசிபெருமாள் மரணத்திற்கு போராட்டம் நடத்திய அரசியல் கட்சியினர் டாஸ்மாக் ஊழியர்களின் மரணத்திற்கு பதில் சொல்வார்களா?