வெள்ளத்துக்கு காரணமே ஆக்கிரமிப்புதான்- தமிழக அரசு; அரசை நாங்க நடத்த முடியாது- ஹைகோர்ட் குட்டு
சென்னை வெள்ளத்துக்கு காரணமே ஆக்கிரமிப்புகள்தான் என ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகரில் மழையால் ஏற்படும் வெள்ளத்துக்கு காரணமே ஆக்கிரமிப்புகள்தான்; எவ்வளவோ முயன்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவ வழங்க உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்புகளே காரணம்
மேலும் இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு காரணமே ஆக்கிரமிப்புகள்தான்; இந்த ஆக்கிரமிப்புகளை எவ்வளவோ முயன்றும் அகற்ற முடியவில்லை.
குழுக்கள் அமைப்பு
மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக 15 ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தமிழக அரசுக்கு குட்டும் வைக்கும் வகையில் கேள்விகளை முன்வைத்தார்.
என்ன நடவடிக்கைகள்?
தாழ்வான பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற என்ன நடவடிக்கை? எடுக்கப்பட்டது? அரசு நிர்வாகத்தை நீதிமன்றமே ஏற்று நடத்த முடியாது எனவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சாடினார்.
1913 சோதனை
அத்துடன் கழிவுநீர் கால்வாய்களுக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும்; நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் எனவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். பின்னர் வெள்ள பாதிப்பு புகார் எண் 1913 வேலை செய்கிறதா? எனவும் சோதனையிட்டார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.