விஜய்யால் IUML-லில் குழப்பம்.. அமைச்சர் பதவி கிடைக்காததால் ஷாஜகான் பதவியேற்பில் பங்கேற்காத எம்எல்ஏ
சென்னை: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பாபநாசம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ ஷாஜகான் இன்று அமைச்சராக பதவியேற்றார். இதனால் அதிருப்தியடைந்த கட்சியின் வாணியம்பாடி எம்எல்ஏ சையது பாரூக் பாஷா பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். இதனால் விஜய் வழங்கிய அமைச்சர் பதவியால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்டது. இந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. வாணியம்பாடி சட்டசபை தொகுதியில் சையது பாரூக் பாஷா என்பவரும், பாபநாசம் தொகுதியில் ஏஎம் ஷாஜகான் என்பவரும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தான் தமிழகத்தில் ஆட்சியமைக்க முதல்வர் விஜய்யின் தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் விஜய் அழைப்பை ஏற்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியது. சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து விஜய், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியை வழங்கினார். இதையடுத்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் ஆலோசனை நடத்தினார். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பாபநாசம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ ஏஎம் ஷாஜகானுக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அறிவித்தார்.
அதன்படி முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சராக இன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ ஏஎம் ஷாஜகான் பொறுப்பேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ஷாஜகானுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்த பதவியேற்பு விழாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இன்னொரு எம்எல்ஏவான வாணியம்பாடியின் சையது பாரூக் பாஷா பங்கேற்கவில்லை. அவர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் அமைச்சர் பதவி கிடைக்காததால் அவர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் அவர் ஷாஜகான் அமைச்சராக பதவியேற்ற விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications