அமைச்சர் வன்னியரசுக்கு என்ன துறை..? விஜய் போடும் கணக்கு.. விசிக வைத்த டிமாண்ட்?
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் ஒரு முறை மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் கவர்னர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு செய்யும் போது, மீண்டும் ஒரு முறை அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆதவ் அர்ஜூன், செங்கோட்டையன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காகளை மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில், வன்னியரசு மற்றும் ஷாஜகான் ஆகியோருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வன்னியரசுக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதுதான் தற்போது பெரிய கேள்வியாக இருக்கிறது. காரணம் விசிக கட்சியின் ஆதரவில் தான் தவெக ஆட்சி அமைத்தது. இதேபோல் முதல் முறையாக விசிக கட்சியினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு துணை முதல்வர் அளிப்பது வரையில் பேச்துவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துறைகள் வன்னியரசு தொகுதி மக்களுக்கு நேரடியாக பயன்படும் என்றும், அந்த மக்களின் பிரச்சனைகளை சரியாக புரிந்து பிரச்சனைகளை வேகமாக தீர்த்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற கருத்து நிலவுகிறது.
இதேபோல் அவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடன் மட்டும் இணைத்துப் பார்க்காமல், பொதுத் துறைகளை கொடுக்கவும் முதல்வர் விஜய் திட்டமிடலாம் எனவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அவர் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க முடியும். மேலும் விசிக தரப்பில் துறைக்கான எவ்விதமான கோரிக்கையும் விடுக்கவில்லை.
வன்னியரசு ஒரு களப் போராளி. யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். கூட்டணி அரசியலில் இருந்தாலும், எந்த பிரச்சனைக்கும் பயப்படாமல் பேசும் துணிச்சல் அவருக்கு உண்டு. எனவே அவரை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்து வைப்பது சரியான முடிவாக இருக்காது என அரசியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளையில் தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காலியாகவே உள்ளது. அதனால் அந்த துறைகளை வன்னியரசுக்கு ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், சில அமைச்சர்கள் மூன்று அல்லது நான்கு துறைகளை வைத்திருக்கும் நிலையில், அவற்றை மறுபங்கீடு செய்யும் வாய்ப்பும் உள்ளது. சமீபத்தில் சில சிறிய துறைகளை ஒரு அமைச்சரிடமிருந்து எடுத்து மற்றொருவருக்கு மாற்றியது நடந்துள்ளது. இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications