தள்ளிவைக்கப்பட்ட பி.இ. பொதுக் கலந்தாய்வு – 7 ஆம் தேதி தொடக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வானது வரும் 7 ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான 2014-15 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சிறப்புக் கலந்தாய்வு கடந்த 23ஆம் தேதி துவங்கியது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 27 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது.
கலந்தாய்விற்குத் தடை:
இந்நிலையில் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிய பாடப்பிரிவுகளுக்கான அனுமதி வரும்வரை கலந்தாய்விற்குத் தடைவிதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தன. இதையடுத்து 26ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது.
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:
அதனடிப்படையில் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் கலந்தாய்வை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப் பட்டது.
இந்த மாதம் தொடக்கம்:
மாணவர்கள் அனைவரும் இதன் காரணமாக கவலையில் ஆழ்ந்த நிலையில் பொறியியல் பொது கலந்தாய்வு வரும் 7 ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் இன்று அறிவித்துள்ளார்.
இணையதளத்தில் அறிவிப்பு:
அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு வரும் 7ஆம் தேதி அன்று தொடங்குகின்றது. எந்தெந்த தேதிகளில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு குறுஞ்செய்தி:
மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் குறுஞ்செய்தி மூலம் செய்தி அனுப்பப்படும். இந்த காலதாமதத்தை சரிகட்டும் வகையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
கூடுதல் எண்ணிக்கை:
தினமும் 4000 முதல் 5000 மாணவர்கள் வரை அழைக்க திட்டமிட்டு இருந்தனர். புதிய கால அட்டவணைப்படி கூடுதலாக 500 பேரை அழைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 11 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.