தள்ளிவைக்கப்பட்ட பி.இ. பொதுக் கலந்தாய்வு – 7 ஆம் தேதி தொடக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வானது வரும் 7 ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான 2014-15 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சிறப்புக் கலந்தாய்வு கடந்த 23ஆம் தேதி துவங்கியது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 27 ஆம் தேதி துவங்குவதாக இருந்தது.
கலந்தாய்விற்குத் தடை:
இந்நிலையில் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் புதிய பாடப்பிரிவுகளுக்கான அனுமதி வரும்வரை கலந்தாய்விற்குத் தடைவிதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தன. இதையடுத்து 26ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது.
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு:
அதனடிப்படையில் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் கலந்தாய்வை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப் பட்டது.
இந்த மாதம் தொடக்கம்:
மாணவர்கள் அனைவரும் இதன் காரணமாக கவலையில் ஆழ்ந்த நிலையில் பொறியியல் பொது கலந்தாய்வு வரும் 7 ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் இன்று அறிவித்துள்ளார்.
இணையதளத்தில் அறிவிப்பு:
அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு வரும் 7ஆம் தேதி அன்று தொடங்குகின்றது. எந்தெந்த தேதிகளில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு குறுஞ்செய்தி:
மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் குறுஞ்செய்தி மூலம் செய்தி அனுப்பப்படும். இந்த காலதாமதத்தை சரிகட்டும் வகையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
கூடுதல் எண்ணிக்கை:
தினமும் 4000 முதல் 5000 மாணவர்கள் வரை அழைக்க திட்டமிட்டு இருந்தனர். புதிய கால அட்டவணைப்படி கூடுதலாக 500 பேரை அழைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 11 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications