பதில் சொன்னா ஓடி ஒளிவாரு.. எல்லாம் அரசியல் நாடகம்.. அமித்ஷா எடப்பாடி மீட்டிங்கை விமர்சித்த அமைச்சர்!
சென்னை : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், திமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பே ஒரு அரசியல் நாடகம் என விமர்சித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று முன்தினம் முதன் முதலாக டெல்லி சென்றது அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆர்வம் காட்டின.

திமுக அரசு பற்றி எடப்பாடி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசியல் நிலவரம், நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி என்று பல விஷயங்களையும் அவர்கள் விவாதித்துள்ளனர். மேலும், திமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது, பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ பற்றியும் அதை அரசியல் ரீதியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், திமுகவினர் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டி புகார் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமித் ஷாவிடம் கோரிக்கை : "தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவில், ரூ.30,000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டதாகவும், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறோம்" என பிரஸ்மீட்டில் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பை விமர்சித்துள்ளார் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்திருப்பது அரசியல் நாடகம் என விமர்சித்துள்ளார்.

திமுக அமைச்சர் காட்டம் : மனோ தங்கராஜ் பேசுகையில், "சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கும் போது ஓடி ஒளிந்து கொள்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுகிறார். தேசிய கணக்கீட்டை பார்க்கும் போது தமிழ்நாட்டில் குற்றங்கள் மிக மிகக் குறைவு. இந்த நேரத்தில் இவர் அமித் ஷாவை சந்தித்திருப்பது அரசியல் நாடகம். சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்களுக்கு எதிர்க்கட்சி செய்ய வேண்டியவைகளை செய்யாமல் இருந்ததை மக்களிடம் இருந்து மறைக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்வது இயல்பான ஒன்று தான். விஏஓ கொலை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்தது மட்டுமின்றி அந்த குடும்பத்தையும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து பாதுகாத்து உள்ளார் முதல்வர். தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி குற்றவாளிவாளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார் முதல்வர்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications