ஈபிஎஸ்-ஓபிஎஸ் நாளை டெல்லி பயணம்.. சசிகலா நியமனம் தொடர்பான பிரமாண பத்திரங்கள் வாபஸ்?
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பான பிரமாணப் பத்திரங்களை திரும்ப பெற முதல்வரும், துணை முதல்வரும் நாளை டெல்லிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சசிகலா நியமனம் தொடர்பாக அதிமுகவின் இரு அணிகளும் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை திரும்ப பெற முதல்வரும், துணை முதல்வரும் நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பும், ஆதரவு தெரிவித்து ஈபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
Recommended Video
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து விட்ட நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றுள் முக்கியமானது, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பாக இரு அணிகளும் தாக்கல் செய்த பிரணாப பத்திரங்களை வாபஸ் பெறுவது என்பதாகும். அதன்படி அந்த பத்திரத்தை திரும்ப பெற முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, சிவி சண்முகம், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர்.
அப்போது தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெறுவது என்றும் அதிமுக சார்பில் செயற்குழுவும், பொதுக் குழுவும் கூட்டுவது குறித்தும் விளக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறுவதற்காக எம்எல்ஏ-க்கள், எம்பிக்களிடம் கையெழுத்து பெற்று விட்டனர் என்று கூறப்படுகிறது.