ஈரோட்டில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: தாய்-மகனை தாக்கி நகை, பணம் கொள்ளை
தாய், மகனை தாக்கிய மர்மகும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
ஈரோடு: ஈரோட்டில் தாயையும் மகனையும் தாக்கியதோடு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மகும்பலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.
ஈரோடு அருகேயுள்ள ஓடைகாட்டு வலசை சேர்ந்தவர் தங்கம்மாள். இவரது மகன் கோபாலகிருஷ்ணன். விவசாயிகளான இவர்கள் நேற்றிரவு வீட்டில் இருந்தபோது, காரில் வந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்பக்க கதவின் வழியாக உள்ளே நுழைந்துள்ளது.

அறிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த அக்கும்பல் தங்கம்மாளின் வாயில் துணியை வைத்து அழுத்தியது. மேலும் கோபாலகிருஷ்ணனை அரிவாளால் தாக்கியது.
இதனையடுத்து தாய், மகன் இருவர் அணிந்திருந்த நகைகள், மற்றும் பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து அந்த கும்பல் தப்பி சென்றது.
இதனையடுத்து தாய், மகன் இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ பகுதிக்கு வந்த அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் மர்ம கும்பல் ஒன்று நுழைந்து நகை பணம் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதேபோல் அப்பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications