இந்தியாவிலேயே யாரும் வெளியிடாத தேர்தல் அறிக்கையை நாளை வெளியிட உள்ளோம்: மாஃபா பாண்டியராஜன்
இந்தியாவிலேயே யாரும் வெளியிடாத தேர்தல் அறிக்கைகள் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் நாளை வெளியிடப்படும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை: இதுவரை யாரும் வெளியிடாத, ஏன் இந்தியாவிலேயே யாரும் வெளியிட தேர்தல் அறிக்கைகள் நாளை வெளியிடப்படப்படும் என்று ஆவடி தொகுதியின் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு புதுவண்ணாரப்பேட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சிகிச்சை அளிக்க தடைபோட்டவர்களில் ஓ.பன்னீர் செல்வமும் ஒருவர், பண மோசடிகளில் ஈடுபட்டவர், மணல் மாபியா சேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஓ.பன்னீர் செல்வத்தின் மீது ஸ்டாலின் முன்வைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பசுமைவழி சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தோல்வி பயம்
அப்போது அவர் கூறுகையில், இத்தனை நாள்கள் ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்காத ஸ்டாலின், ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் ஓபிஎஸ் அணியினர் முந்துவதால் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை தற்போது வைக்கிறார். திமுகவின் ஊழல்களையும் அம்பலப்படுத்துவோம்.
சமரசம் இல்லை
எங்களுக்கு முதல் எதிரி திமுகதான். எனவே அவர்களை எதிர்ப்பதில் ஓபிஎஸ் எந்த சமரசத்தையும் செய்து கொள்ள மாட்டார். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் முன்வைப்பது, சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல, கருணாநிதியின் குடும்பத்தையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறோம்.
தேர்தல் அறிக்கை
ஓபிஎஸ் இல்லத்துக்கு அருகில் உள்ள தேர்தல் பணிமனையும் திறக்கப்படவுள்ளது. அப்போது இதுவரை யாரும் வெளியடாத, ஏன் இந்தியாவிலேயே யாரும் வெளியிடாத அளவுக்கு ஒரு தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுவோம். மிகவும் வித்தியாசமான தேர்தல் அறிக்கையாக இருக்கும்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
ஆர்.கே.நகரில் பணம் விநியோகித்து வருவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். மேலும் இரட்டை விளக்கு சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீடில்லாத 6,000 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்.
முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
முக்கியமான அறிவிப்புகள், அதிமுகவுக்கு சேதம் உண்டாகாத வகையிலான அறிவிப்புகளை ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை வெளியிடுவார். மேலும் மு.க.ஸ்டாலினின் அனைத்து கேள்விகளுக்கும் இன்று மாலை பதிலளிப்போம் என்றார் அவர்.