ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மறைவுக்கு ஜெ. நேரில் அஞ்சலி!
சென்னை: சென்னையில் காலமான திராவிடர் இயக்க மூத்த தலைவர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்த சுலோச்சனா, நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. சென்னை வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள வீட்டில் சுலோச்சனா சம்பத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
சுலோச்சனா சம்பத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, பொதுவாழ்வில் பெண்கள் பங்கு பெறுவதற்கும், சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற்றிடவும் உழைத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவு தமக்கும், அதிமுகவுக்கும் பேரிழப்பு என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுலோச்சனா சம்பத் உடலுக்கு ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.