காங்கிரஸின் தலைவிதி திருநாவுக்கரசர்- ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் பாய்ச்சல்
ஈரோடு: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவிதி என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கூட்டத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின. திருநாவுக்கரசர் பெயரிலான டிவிட்டர் பக்கத்திலும் அதுகுறித்து தகவல் வந்தது. ஆனால்சற்று நேரத்திலேயே அதை மறுத்து விட்டார் திருநாவுக்கசர்.

நாளைதான் காங்கிரஸ்கட்சியின் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறி விட்டார். இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருநாவுக்கரசரின் செயல்பாடு அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், திருநாவுக்கரசரின் செயல்பாடு முற்றிலும் மேலிட முடிவுக்கு புறம்பானது. திமுகவின் நிலைப்பாட்டை ஒட்டித்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் முடிவு இருக்கும் என மேலிடம் கூறியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக நடந்து வருகிறார் திருநாவுக்கரசர். இதுகுறித்து கட்சி மேலிடத்தில் புகார் தரப்படும்.
விரைவில் திருநாவுக்கரசர் அதிமுகவுக்குப் போய் விடுவார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவிதி என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகத்தான் காங்கிரஸ் ஓட்டுப் போடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்த முடிவை காங்கிரஸ் மேலிடம் எப்போதோ எடுத்து விட்டது. திருநாவுக்கரசர் சொல்வதெல்லாம் கட்சியின் கருத்தல்ல, முடிவல்ல என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications