ஜெ. கொடநாட்டில் இருந்தாலும் ஒன்றுதான்.. சென்னையில் இருந்தாலும் ஒன்றுதான்.. இளங்கோவன் தாக்கு
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தாலும் ஒன்றுதான், கொடநாட்டில் இருந்தாலும் ஒன்றுதான். ஏன் அமெரிக்காவில் இருந்தாலும் ஒன்றுதான். ஏன் என்றால் அவர் செயல்படுவதே இல்லையே. பிறகு எங்கிருந்தால் என்ன என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரியும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நடைபயணத்தை காங்கிரஸார் மேற்கொண்டனர்.
சென்னையில், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் திருவல்லிக்கேணி பகுதி 23 சர்க்கிள் சார்பில் இன்று காலை 10 அளவில் ராயப்பேட்டை வி.எம்.தெருவில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்.

எங்கிருந்தால் என்ன
அப்போது செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தாலும் சரி, கொடநாட்டில் இருந்தாலும் சரி, அமெரி்க்காவில் இருந்தாலும் சரி. எல்லாம் ஒன்றுதான். ஏனென்றால் அவர் செயல்படாத முதல்வராக இருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. எதுவுமே நடக்கவில்லை. செயலற்ற அரசு அரசாண்டு கொண்டிருக்கிறது.

காவல்துறையில் அதிமுக குறுக்கீடு
காவல்துறையினர் தன்னிச்சையாக, பாரபட்சமின்றி செயல்பட முடியவில்லை. போலீஸ் இலாகாவில் அதிமுகவினரின் தலையீடு உள்ளது. எனவே அவர்களால் கடமையை செய்ய முடியவில்லை.

பூரண மதுவிலக்கை அமல் செய்க
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதை அரசு செய்ய வேண்டும். மக்கள் மதுவின் கொடுமையை உணர்ந்து அதிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications