பெரியாருடன் மோடியை ஒப்பிடுவதா?: விஜயகாந்துக்கு இளங்கோவன் கண்டனம்
ஈரோடு: பெரியாருடன் மோடியை ஒப்பிட்டு பார்க்காதீர்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது தந்தை பெரியாருடன் நரேந்திரமோடியை ஒப்பிட்டு பேசியுள்ளார். இது தொடர்பாக பெரியாரின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கூறியதாவது.
விஜயகாந்த் என்னுடைய நல்ல நண்பர். ஆனால் அவர் இப்போது சேர்ந்திருக்கின்ற இடம் அவரை தடுமாற வைத்திருக்கிறது. தந்தை பெரியாருடன் மோடியை ஒப்பிட்டு பேசுவது எந்தவிதத்தில் நியாயம்?.

மோடி, முழுக்க முழுக்க மதவாதி. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் உள்ளவர். ஆங்கிலம் தெரிந்திருந்தும் இந்தியில் மட்டுமே பேசக்கூடியவர். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்கி வைத்திருப்பவர். எனவே பெரியாருடன் மோடியை ஒப்பிடுவது நியாயமில்லை.
விஜயகாந்திடம் நட்புரிமையுடன் கேட்கிறேன். தயவு செய்து பெரியாருடன் மோடியை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
பெரியார், சமூக புரட்சிக்கு வித்திட்டவர். பிற்படுத்தபட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். எனவே மீண்டும் கேட்கிறேன் பெரியாருடன் ஒப்பிடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ‘‘வானத்தில் பறந்தாலும் பூமியில் நடந்தாலும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இந்த லோக்சபா தேர்தலில் ஜெயிக்காது. தமிழகத்தில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி பிரசாரம் செய்வதை மாநில தலைவர் ஞானதேசிகன் முறைப்படி அறிவிப்பார்.
நான் திருப்பூர் தொகுதியில் பிரசாரம் செய்யுமாறு சோனியாவை நேரில் சந்தித்து வற்புறுத்தியுள்ளேன். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்'' என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications