வாழ்த்தோடு வாழ்த்தாக பாஜகவை "குத்தி" விட்டுப் போன ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: பா.ஜ.க.ஆட்சி அமைந்த பிறகு மத சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற பதற்றமான சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எளிய குடும்பத்தில் பிறந்து, அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் இயேசு பெருமான்.

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று கூறி அடித்தள மக்களின் வாழ்வு உயர்வுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அருளாளர் அவர்.
அவர் ரத்தம் சிந்தி மரணத்தை தழுவினாலும் முன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களால் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் ஏற்போம்.
மத்தியில் பா.ஜ.க.ஆட்சி அமைந்த பிறகு மத சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற பதற்றமான சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள், குறிப்பாக தேவாலயங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
மதமாறற் தடை சட்டம் கொண்டு வருவதாகச் சொல்லி அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். மத சுதந்திரத்திற்கு உலை வைக்கும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள் இத்தகைய தீய சக்திகளிடமிருந்து கிறிஸ்துவ சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. அவர்களது பாதுகாப்பை உறுதி செய்து வளமான வாழ்வை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications