Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிக விலைக்கு அதானி நிறுவனத்திடம் மின்கொள்முதல் ஏன்?.. தமிழக அரசுக்கு காங். கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு, மலிவாக கிடைக்கும் மின்சாரங்களை தவிர்த்து, அதானி நிறுவனத்திடமிருந்து யூனிட்டுக்கு ரூ.7.01 விலைக்கு சோலார் மின்சாரம் வாங்குவது ஏன் என்று காங்கிரஸ் கட்சி தமிழ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ரூ.54 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குகிற தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் நட்டத்தில் சிக்க வைக்கலாமா? என தமிழக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதானி நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை ரூ.7.01 விலை கொடுத்து 25 வருடத்திற்கு கொள்முதல் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கடந்த 4.7.2015 அன்று ஒப்பந்தம் போடப்பட்டது.

EVKS Elangovan wants TN government should cancel the deal with the Adani group to buy power at `7.01 per unit

இதற்காக இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியில் 5,000 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இத்தகைய ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து ஏற்கனவே கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். அதற்கு முதலமைச்சரோ, மின்துறை அமைச்சரோ இதுநாள் வரை உரிய விளக்கத்தை தரவில்லை.

தற்போது மத்தியபிரதேச அரசு பகிரங்க ஏலத்தின் மூலமாக 648 மெகாவாட் சூரிய மின்சக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய ஒரு யூனிட் ரூ.5.05 விலைக்கு மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்கை பவர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த பகிரங்க ஏலத்தில் பங்கேற்ற அதானி நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்ய ரூ.6.04 விலை கோரியுள்ளது தற்போது வெளிவந்துள்ளது.

மத்தியபிரதேசத்தில் ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரத்திற்கு ரூ.6.04 கோரிய அதானி நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.7.01 விலை கொடுத்தது ஏன் என்கிற மிகப்பெரிய கேள்வி இன்றைக்கு எழுந்துள்ளது. பகிங்க ஏலமுறை மூலம் சூரியசக்தி மின்சார கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யாமல், குறிப்பிட்ட நிறுவனத்துடன் ரகசியமாக பேசி விலை நிர்ணயம் செய்தது ஏன்? எந்த அடிப்படையில் அதானி நிறுவனத்திற்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

மத்தியபிரதேசத்தில் ஒருநாளைக்கு 5 மணி நேரம் சூரியசக்தி மின்சாரத்தை, பகிரங்க ஏலத்தில் அதானி நிறுவனம் கோரிய ரூ.6.04 விலையோடு தமிழகத்தின் கொள்முதல் விலையான ரூ.7.01 உடன் ஒப்பிட்டால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஒருநாள் இழப்பு ரூ.7.76 கோடி.

அதேபோல மத்தியபிரதேச அரசு பகிரங்க ஏலமுறை மூலம் வாங்கிய விலையான ரூ.5.05 விலையோடு தமிழக அரசு அதானி நிறுவனத்திடமிருந்து சூரியமின்சக்தி வாங்குகிற கொள்முதல் விலையோடு ஒப்பிட்டால் ஒருநாள் இழப்பு ரூ.12 கோடி. இத்தகைய இழப்பு உள்ள நிலையில் அதானி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன? ஒப்பந்தத்தின் பின்னாலே இருக்கிற திரைமறைவு ரகசியம் என்ன? பேரம் என்ன?

சூரியசக்தி மின்சாரம் ஒரு யூனிட் ரூ.3.50 விலைக்கும், அனல் மின்சாரம் ஒரு யூனிட் ரூ.4 விலைக்கும் கிடைக்கிற போது அதானி நிறுவனத்திடமிருந்து ரூ.7.01 விலைக்கு வாங்குவது ஏன்? ஏற்கனவே ரூ.54 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குகிற தமிழ்நாடு மின்சார வாரியம் மேலும் நட்டத்தில் சிக்க வைக்கலாமா ? இது ஒரு பொறுப்புள்ள அரசு செய்கிற செயலா?

ஒரு தனியார் நிறுவனத்திற்கு 5,000 ஏக்கர் நிலத்தை தாரை வார்க்க எந்த அடிப்படையில் உதவியது என்பது குறித்து உரிய விளக்கத்தை தமிழக அரசு தர வேண்டும். இதைப்போல விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகத்தான் நிலகையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஜெயலலிதா கூறுகிறாரா? அதற்காகத்தான் மாநில உரிமை பற்றி பேசுகிறாரா?

நிலகையகப்படுத்துதல் என்பது அரசமைப்புச் சட்;டத்தின் பொதுப்பட்டியலில் உள்ளதன் அடிப்படையில்தான் நிலகையகப்படுத்துதல் சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013 இல் நிறைவேற்றியது. அந்த சட்டத்தில் உள்ள விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் அதில் திருத்தம் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த மசோதாவை கடந்த மார்ச் 10 ஆம் தேதி ஆதரித்த அ.தி.மு.க. திடீரென அதே சட்ட திருத்தத்தை இன்று எதிர்ப்பது ஏன்? எதிர்ப்பதன் பின்னணி என்ன?

தமிழக நலனுக்கு விரோதமாக அதானி குழுமத்திற்கு அதிக அளவிலான சலுகைகள் வழங்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+