சோதனைக் காலத்தில் கார்த்திக் வந்து சேர்ந்தது ரொம்ப ஆறுதலாக இருக்கிறது... ஈ.வி.கே.எஸ். பேச்சு!
சென்னை: சோதனைக் காலத்தில் நடிகர் கார்த்திக் வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வெளியேறியுள்ள நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகரிக்க ஈ.வி.கே.எஸ். முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று சத்திய மூர்த்தி பவனுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்து, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக்கும் இன்று அங்கு வந்திருந்தார். இளங்கோவனோடு சேர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அப்போது அவர் கூறியதாவது:-
மகிழ்ச்சி...
காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள இந்த சூழ்நிலையில், நீங்கள் காங்கிரசில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களை பாராட்டி வரவேற்கிறேன்.
ஆறுதல்...
காங்கிரஸ் ஆட்சியின் போது பதவி சுகம் அனுபவித்த சிலர் இன்று, சோதனையான கால கட்டத்தில் பிரிந்து சென்று விட்டனர். இந்த சூழ்நிலையில் நீங்கள் சேர்ந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உங்களை மனதார வரவேற்கிறேன்.
நாடு தான் முக்கியம்...
சோனியாகாந்திக்கு வெற்றி தோல்வி முக்கிய மல்ல. நமது நாடுதான் முக்கியம். மதவெறி நாடாக இல்லாமல் மதசார்பற்ற நாடாக இருப்பதற்கு அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
ஒரு தாய் பிள்ளையாக...
இமயம் முதல் குமரி வரை ஒரே தாயின் பிள்ளையாக இருந்தால் தான் காங்கிரசை வலுப்படுத்த முடியும். சிலர் இந்த கட்சியில் இருந்து விலகியது பலர் கட்சிக்குள் வருவதற்கு வசதியாக அமைத்துவிட்டது.
நாட்டை காப்பாற்ற வேண்டும்...
காங்கிரஸ் என்கிற வீட்டை சீர் செய்து பலப்படுத்தினால் தான் நாட்டை காப்பாற்ற முடியும்.
ஆழமான கருத்துக்கள்...
கார்த்திக் அவர்கள் அழகானவர் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆழமான கருத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.
பெரிய தேச பக்தர்...
நான் அவருடைய பேச்சை இன்றைக்குத்தான் நேரடியாக கேட்கின்றேன். இவ்வளவு அழகாக சொன்ன கருத்துக்கள் அவர் எவ்வளவு பெரிய தேச பக்தர் என்பதை புரிய வைத்தது.
சோனியாவின் வாழ்த்து...
கார்த்திக் இணைவது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொலைபேசியில் தெரிவித்தேன். முடிந்தால் நானே வந்திருப்பேன். ஆனால் முடியாது என்று சொன்னதோடு மட்டுமல்ல, என்னுடைய வாழ்த்துக்களை கார்த்திக்கு சொல்லுங்கள் என்று கூறினார்' என இவ்வாறு அப்போது அவர் தெரிவித்தார்.