கருத்து சுதந்திரத்திற்கு தடை...பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கு; இளங்கோவன் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு தடை, விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கு என பல்வேறு அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாக கண்டிப்பதாக அதன் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சில ஆண்டு காலமாக பத்திரிகை சுதந்;திரம் பறிக்கப்டுகிற நடவடிக்கைகளை அதிமுக அரசு செய்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடாத பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரம் வழங்க மறுப்பது, தொலைகாட்சிகளின் கேபிள் தொடர்ப்புகளை துண்டிப்பது என பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.
தமிழக மக்கள் மிகவும் விரும்பி படிக்கும் ஆனந்த விகடன் வார இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் நாலரை ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அவலங்கள் பட்டியலிட்டு வெளியிடப்பட்டது. இதை சகித்து கொள்ள முடியாத ஜெயலலிதா அரசு ஆனந்த விகடன் வார இதழ் மீது அவதூறு வழக்கை தொடுத்திருக்கிறது. இதன் மூலம் ஆனந்த விகடன் இதழை நசுக்கிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் கனவு காண்கிறார்கள். ஏற்கனவே, ஜெயலலிதா ஆட்சியில் ஆனந்த விகடன் மீது தொடுக்கப்பட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆனந்த விகடனில் வெளிவந்த இதே கட்டுரையை விகடன் முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையை லட்சகணக்கான மக்கள் விரும்பி படித்திருக்கிறார்கள். இதை சகித்துக்கொள்ள முடியாத ஜெயலலிதா தன்னுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி விகடன் முகநூலை யாரும் பார்க்க முடியாத அளவிற்;கு முடக்கி இருகின்றது. இதை விட ஜனநாயகப் படுகொலை எதுவும் இருக்க முடியாது.
தமிழகத்தில் கருத்து சுதந்திரதிற்கு தடை, விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்கு, பாட்டுபாடி பிரசாரம் செய்த தெரு பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு என பல்வேறு அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.