மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தலையாய பணியாக கருத வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அனைவரும் தலையாய பணியாக கருத வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. மக்கள் பாதுகாப்பற்ற முறையில் அச்சத்துடனும், பதட்டத்துடனும் என்ன நடக்க போகிறதோ என்று அஞ்சி, அஞ்சி வேதனையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முறையாக செய்யுமா? என்கிற அச்சம் நமக்கு ஆழமாக இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை முன்னின்று செய்வதற்கு முன்வருவதன் மூலமாக மக்களின் துயரத்தை நிச்சயமாக தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. மிகச்சோதனையான காலகட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தலையாய பணியாக அனைவரும் கருதி செயல்பட வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக பாதிக்கப்பட்ட மக்களை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தங்கவைத்து, உணவு வழங்கி பராமரிக்கிற பணியை கடந்த 3 நாட்களாக செய்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசை எதிர்பார்க்காமல் நமக்கு நாமே உதவி செய்கிற அணுகுமுறை மூலமாக, இயற்கையின் சீற்றத்திலிருந்து மக்களை நிச்சயமாக காப்பாற்ற முடியும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications