ஜல்லிக்கட்டுக்கு அனுமதி... இளங்கோவன் பாராட்டு... இது தேர்தலுக்கான நாடகம் என்கிறார் குஷ்பு
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் பாராட்டும், வாழ்த்தும் கூறியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, இது சட்டசபை தேர்தலுக்கான நாடகம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கான அறிவிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி,மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டிற்கு காளைகள் உகந்தது தானா என பரிசோதனை செய்ய வேண்டும். எனவும், வாடிவாசலில் இருந்து 15 மீட்டர் தொலைவிற்குள்தான் காளைகளை அடக்க முயற்சிக்க வேண்டும்.

காளைகள் வதை செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும், காளைகளுக்கு போதை வஸ்துகள் எதையும் கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, மதுரை மாவட்டம் பாலமேட்டில் கொண்டாட்டம் களைகட்டிள்ளது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசிற்கும் மாடுபிடி வீரர்கள் தங்களின் நன்றியினை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பாலமேட்டில் இன்று நடைபெறவிருந்த கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பாராட்டு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி காரணமல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அனைவரும் ஒன்றாக இணைந்து கருத்து தெரிவித்த காரணத்தினாலே வெற்றி பெற முடிந்தது என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்
குஷ்பு கருத்து
தமிழக்ததில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு வரவேற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்றும் கூறியுள்ளார். பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 18 மாதங்களாகிவிட்டது. இத்தனை மாதங்களாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராமல் திடீரென்று கொடுத்தது சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் என்றும் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications