காங்கிரஸ் தலைவராக ராகுல் விரைவில் பொறுப்பேற்றால் கட்சிக்கு நல்லது...சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.!
கோவை: ராகுல்காந்தி விரைவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது: தமிழக தேர்தல் ஆணையத்தை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. ஜி.எஸ்.டி மசோதவில் உள்ள சரத்துகளை பொறுத்து அதனை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். தற்போது 570 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அதிமுகவுக்கும், பாஜகவும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா சந்திக்க உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை பிரதமருக்கு கடிதங்களை தபால் மூலம் அனுப்பி வந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது தபால்களை நேரடியாக கொடுக்க உள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும், ராகுல்காந்தி விரைவில் தலைவராக பதவியேற்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது எனவும் இளங்கோவன் கூறினார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என அந்த கட்சியில் சிலர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சில மூத்த தலைவர்கள் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி தலைவராக விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என இளங்கோவன் கூறியுள்ளார்.