நரபலி.. தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகளை ஹைதராபாத் அல்லது பெங்களூரில் ஆய்வு செய்க- இளங்கோவன்
சென்னை: மதுரையில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனத்தால் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் விடாப்பிடியான போராட்டத்தைத் தொடர்ந்து தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகளை தமிழகத்தில் ஆய்வு செய்யக் கூடாது. மாறாக ஹைதராபாத் அல்லது பெங்களூரில் அதை ஆய்வு செய்தால்தான் உண்மை வெளி வரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது...

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் கிரானைட் குவாரி அமைத்து பி.ஆர்.பி. என்ற நிறுவனம், கிட்டத்தட்ட 16 ஆயிரத்து 338 கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறது சரியான கணக்குகளை சொல்லாத காரணத்தினால்.
அந்த குவாரி கம்பெனி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய நடவடிக்கைகளை எல்லாம் ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்களை நியமித்திருக்கிறது. அவரும் இதுவரை கொடுத்த அறிக்கையில் கிட்டதட்ட 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதை சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல தொடர்ந்து அந்த நிறுவனத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, அதேபோல அந்த நிறுவனத்தால் செய்யப்பட்ட மோசமான காரியங்கள் எல்லாம் விசாரிப்பதற்காக அவர் தொடர்ந்து மதுரையில் இருக்கிறார். ஆனால் அவரது நடவடிக்கைகளுக்கு தமிழக அரசாங்கம், அரசாக இருந்தாலும் சரி, போலீசாக இருந்தாலும் சரி சரிவர ஒத்துழைப்பு என்பதே இல்லாமல் இருந்து வந்தது. இருந்தாலும் சகாயம் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றார். அறிக்கையாக தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் பி.ஆர்.பி. என்பவரிடம் கார் டிரைவராக வேலை செய்த சேவற்கொடியான் என்பவர், பி.ஆர்.பி. நிறுவனம் நரபலியும் கொடுத்திருக்கின்றது. 16 பேர்களை உயிர்பலி கொடுத்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது. எங்கு புதைக்கப்பட்டது என்பது தெரியும் என்று சொல்லியிருக்கின்றார். அதனை விசாரணை செய்வதற்காக அவர் சுட்டிக்காட்டிய, அடையாளம் காட்டிய இடத்தில் புதைந்திருந்த எலும்புகளை, எலும்புக்கூடுகளை எடுக்க முயற்சித்தபோது காவல்துறையும், ஆட்சியாளர்களும் பூரண ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
நீதிமன்ற ஆணைப்படித்தான் நான் நடந்துகொள்கிறேன். ஆகவே இதனை எப்படியும் செய்தாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியபோதும், போலீசார் செவிசாய்க்கவில்லை. இதையடுத்துத் தோண்டும் வரையில் இந்த இடத்தில் இருந்து நகரப்போவதில்லை என்று அங்கேயே கட்டிலை போட்டு படுத்திருக்கிறார் சகாயம். இதன் பின்னர் காலையில் வந்த அதிகாரிகள் ஆட்களை வைத்து அந்த இடத்தை தோண்டும்போது இரண்டு பேரின் எலும்பு கூடுகளும், ஒரு குழந்தையின் எலும்பு கூடும் இருந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அந்த இடத்தை தோண்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். அதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். எவ்வளவு எலும்பு கூடுகள் அங்கே கிடைக்கப்போவது என்று தெரியவில்லை. ஆகவே இதுபற்றி தீவிர விசாரிக்க வேண்டும்.
தோண்டி எடுக்கப்பட்ட எலும்பு கூடுகளை தடய அறிவியல் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதனை தமிழ்நாட்டில் செய்யக் கூடாது. தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் தடய அறிவியல் பரிசோதனை என்பது ஒன்று ஹைத்ராபாத், மற்றொன்று பெங்களுருவில் நடத்தப்பட வேண்டும்.
இந்த விசாரணையை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிபிஐ கட்டுப்பாட்டில் சிறப்பு விசாரணைப் படையை அமைத்து அவர்களது பொறுப்பில் ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நரபலி கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications