பியூட்டி பார்லரில் பெண் மீது தாக்கிய முன்னாள் கவுன்சிலர் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்
Recommended Video
பெரம்பலூர்: அழகு நிலையத்தில் பெண்ணின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்யா. இவர் அங்கு பல ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அந்த அழகு நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார், சத்யாவை கடுமையாக தாக்கினார். ஏதோ பேசிக் கொண்டே அவர் சத்யாவை தாக்கிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. பெண் என்றும் பாராமல் அவர் மீது செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கும் காட்சிகளை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் செல்வக்குமார் மீது திமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினர் எஸ். செல்வகுமார் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் பிரியாணி கடைக்குள் புகுந்த யுவராஜ் என்பவர் அங்கு பிரியாணி இல்லை என்று கூறிய ஊழியரை கடுமையாக தாக்கினார். இதையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.