ஜெ.வுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 கம்பெனிகளின் எம்டியாக இருந்த 'சோ'
ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை எம்டியாக இருந்தவர் சோ ராமசாமி.
சென்னை: மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 கம்பெனிகளின் எம்டியாகவும் இருந்து செயல்பட்டவர்.
அரசியல் விமர்சகராக பத்திரிகையாளராக செயல்பட்ட சோ ராமசாமி பல முக்கிய தலைவர்களுக்கு ராஜகுருவாகவும் இருந்தார். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் நண்பராகவும் இருந்தார் சோ.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை தொடக்க காலங்களில் சோதான் ஆலோசகர் நண்பர் எல்லாம்.... பின்னாளில்தான் சசிகலா மெல்ல மெல்ல அந்த இடத்தை கைப்பற்றுகிறார்.

சசிகலா vs சோ
ஆனாலும் சசிகலாவை ஜெயலலிதா வேண்டாம் என முடிவு செய்து போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றிய காலங்களில் மீண்டும் சோதான் போயஸ் கார்டனில் கோலோச்சுவது வாடிக்கையான ஒன்று. அத்துடன் தமக்கு சொந்தமான நிறுவனங்களில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப்பட்டு அவற்றின் முழு பொறுப்பையும் சோ ராமசாமியிடம் கொடுத்திருந்தவர் ஜெயலலிதா.

சசிகலா வெளியேற்றம்
கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவடைந்த போது ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அனைவரும் துரோகம் செய்ததாக தமக்கு எதிராக சதி செய்ததாக ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார் ஜெயலலிதா. இதனால் போயஸ் தோட்டத்தை சசிகலா வெளியேற நேரிட்டது.

9 நிறுவன எம்டி
அப்போது ஒரே நாளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசம் இருந்த 9 நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக சோ ராமசாமி நியமிக்கப்பட்டார். இதில் 3 மதுபான ஆலைகளாகும். பின்னர் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்த உடன் ஒரே நாளில் மிடாஸ் உட்பட 9 நிறுவனங்களில் இருந்தும் சோ ராமசாமி விலகினார்.

பிரசாந்த் பூஷன்
இந்த விவரங்களை கடந்த 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்த பிரசாந்த் பூஷன், சென்னையில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே பகிரங்கப்படுத்தியிருந்தார்.

மிடாஸ் இயக்குநர்
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் சோ பேசுகையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது எனக் கூறினார். இதை விமர்சித்திருந்த திமுக தலைவர் கருணாநிதி, "மதுவகைகள் தயாரிக்கும் "மிடாஸ்" நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வேறு எப்படிப் பேசுவார்?" எனவும் கண்டித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications