சசிகலாவை கைவிட்ட 'தாய்க்குலங்கள்'!
சசிகலா இருந்த வரை அவரை சுற்றி சுற்றி வந்த கோகுல இந்திராவின் பதவியை தினகரன் பறித்துள்ளதன் மூலம் அவர் எடப்பாடி அணிக்கு தாவியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
சென்னை : சசிகலா இருந்தவரை அவரை சுற்றி வந்த மூன்று தேவிகளில் ஒருவரின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளது உறுதியாகியுள்ளது.
ஜெயலலிதா திடீரென மரணமடைந்தது முதல் அதிமுகவை கையில் எடுக்க வேண்டும் என்று சசிகலாவை சுற்றி சுற்றி வந்தனர் 3 பெண் பிரசார பீரங்கள். மீடியாக்கள் பார்வையில் அடிக்கடி அவர்கள்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பி.வளர்மதி மற்றும் சி.ஆர். சரஸ்வதி ஆகியோர்தான் அவர்கள்.
சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று தொண்டர்கள் போயஸ் கார்டனில் கூட்டம் கூட்டமாக வந்து சந்தித்து சென்ற போது அவருக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர்கள் இந்த மூன்று தேவிகள். சசிகலாவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது அவரை தனது வார்த்தைகளால் மேடைப் பேச்சுகளில் கடுமையாக சாடியவர் வளர்மதி.
சசிகலாவை சுற்றி வந்த தாய்க்குலங்கள்
இதே போன்று அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த சி.ஆர். சரஸ்வதியும் சசிகலாவிற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடைசியாக சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் அடித்து சபதம் செய்த போதும் கூட அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்கள் வளர்மதியும், கோகுல இந்திராவும். சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரரஹாரா சிறையில் 3 பேரும் ஒன்றாகப் போய் அவரை சந்தித்துவிட்டு வந்தனர். பெங்களூர் போலீசாரிடம் மூவரும் தடியடி கூட வாங்கினர்.
குழப்பம்
இந்நிலையில் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் முதல்வர் பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைப்பு பேச்சுவார்த்தையை தொடங்கின. இதனால் யார் யார் எந்த எந்த அணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதில் பலருக்கும் குழப்பமே.
அணி தாவியதால் மாற்றம்
அதிமுக அணிகள் இணைந்த பின்னர் டிடிவி. தினகரன், கட்சியில் தனக்கு எதிராக இருப்பவர்களின் பொறுப்புகளை பறித்து வருகிறார். இன்றைய அறிவிப்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு பிடுங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலா இருந்தவரை அவருடனேயே ஒட்டிக்கொண்டு நிழல் போல இருந்த கோகுல இந்திரா முதல்வர் பழனிசாமி அணிக்கு தாவியுள்ளது உறுதியாகியுள்ளது.
நிலைப்பாட்டை மாற்றாத சரஸ்வதி
எனினும் சி.ஆர்.சரஸ்வதி இன்னும் சசிகலா ஆதரவாளராகவே இருக்கிறார். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னரும் கூட சசிகலாவை இவர்கள் ஒதுக்கி வைப்பதற்கு என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டும் என்று ஆதங்கப்பட்டு வருகிறார்.
யார் பக்கம்?
முன்னாள் அமைச்சர் பி. வளர்மதியின் நிலைப்பாடு எடப்பாடி பக்கம் உள்ளது. பாடநூல் கழக தலைவராக உள்ள அவர் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் பங்கேற்றார். எடப்பாடியும் கூட, வளர்மதியை அக்கா என்று அழைத்து உரையாற்றினார்.அதிமுகவில் இணைபிரியா தோழிகளாக வலம் வந்த வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி மூன்று பேரையும் பிரித்து விட்டது அணிகள் பிரச்னை.