பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு? அதிமுகவில் இருந்து விலகலா? மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபர விளக்கம்!
சென்னை: அதிமுக- பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமைந்துள்லது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். அத்துடன் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிராக, அதிமுகவில் இருந்து தாம் விலகவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார் ஜெயக்குமார். முன்னர், அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால் கட்சியை விட்டு வெளியேறுவேன் என அறிவித்திருந்தார் ஜெயக்குமார்.

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான அதிமுக பொதுச்செயலாள எடப்பாடி பழனிசாமியின் சந்திப்புக்குப் பின்னர் அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இணைந்துள்ளது.
ஆனாலும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தேர்தலை சந்திப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த கூட்டணியை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதேநேரத்தில் அதிமுகவிலும் பாஜகவுடனான இந்த கூட்டணிக்கு எதிராக சலசலப்புகள் வெளிப்பட்டு வருகின்றன. பாஜகவுடன் அதிமுக இப்போதும் எப்போதும் கூட்டணி வைக்கவே வைக்காது; அப்படி கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து வெளியேறுவேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னர் கூறியிருந்தார்.
அமித்ஷா- எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு, கூட்டணி அறிவிப்புக்குப் பின்னர் ஜெயக்குமார் கனத்த மவுனம் காத்து வந்தார். கடந்த சில நாட்களாகவே ஜெயக்குமாரின் நிலைப்பாடு பேசு பொருளாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென தமது எக்ஸ் பக்கத்தில், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார் ஜெயக்குமார். ஆனால் அதில் வழக்கமாக இடம் பெறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டோ இடம் பெறவில்லை. இது மிகப் பெரும் சர்ச்சையானது.
மேலும், "தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி!
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாய் மீண்டும் அறிவித்தார் தமிழர்களின் தங்கத் தலைவி அம்மா!
இனி எத்தனை நாளை வந்தாலும் சித்திரை ஒன்றே என்றும் தமிழர்களின் புத்தாண்டு!
தமிழ் மக்களின் நலன் காத்த தாயின் ஆணையின்படி சட்ட பேரவை தலைவராக எனது தலைமையில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழா...
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!" என்றும் ஜெயலலிதா புகழை மட்டும் பாடி பதிவிட்டிருந்தார் ஜெயக்குமார்.
தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி!
— DJayakumar (@djayakumaroffcl) April 14, 2025
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாய் மீண்டும் அறிவித்தார் தமிழர்களின் தங்கத் தலைவி அம்மா!
இனி எத்தனை நாளை வந்தாலும் சித்திரை ஒன்றே என்றும் தமிழர்களின் புத்தாண்டு!
தமிழ் மக்களின் நலன் காத்த தாயின்… pic.twitter.com/xUjPnuTuFJ
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஜெயக்குமார். அதேநேரத்தில், அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டதால் அதிமுகவில் இருந்து தாம் விலகவும் இல்லை எனவும் விளக்கம் தந்துள்ளார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications