2வது மனைவி நடத்தையில் சந்தேகம்... துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற மாஜி எம்.எல்.ஏ. அசோகன் கைது
சென்னை: 2-வது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற மாஜி எம்.எல்.ஏ.வும் அதிமுக தலைமை கழக பேச்சாளருமான திருவாரூர் அசோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் 2006ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவர் தற்போது அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராகவும் இருக்கிறார்.

அசோகன், 2-வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன் ஹேமா நள்ளிரவில் பட்டினப்பாக்கம் போலீசில் ஓடிவந்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தமக்கும் கணவர் அசோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது தம்மை அசோகன் 2 முறை கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும் ஹேமா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அசோகன் மற்றும் அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் 2-வது மனைவி ஹேமா மீது அசோகன் 2 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் அவர் உயிர் தப்பியதாகவும் தெரியவந்தது. அத்துடன் அசோகன் வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டதை அப்பகுதி குடியிருப்புவாசிகளும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அசோகன் மீது கொலைமுயற்சி வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications