பெருகும் பலம்.. சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு
சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் பக்கம் என்று சசிகலா தரப்பு சொல்லிக் கொண்டிருந்த வேளையில், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
"என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்" சசிகலா தரப்பினர் என்று சென்னை மெரினாவில் முதல்வர் ஓபிஎஸ் திடுக்கிடும் உண்மைகளை போட்டுடைத்தார். இதனால் அதிமுகவின் அரசியல் சூழ்நிலை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அரசியல் சூழலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இதனையடுத்து, சசிகலா மீது அதிருப்தியுள்ள அதிமுகவினர் ஓபிஎஸ்ஸை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், இந்நாள் எம்.பிக்கள் ஒ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
எம்.பி மைத்ரேயன், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று, அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இப்படி நாளுக்கு நாள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கும் நிலையில் சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.