ஊட்டி அருகே முன்னாள் ராணுவ வீரர் அடித்துக் கொலை... மனைவி, மகன்கள் கைது
நீலகிரி: ஊட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை அடித்து கொலை செய்த அவரது மனைவியையும், மகன்களையும் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள கல்லட்டி பகுதியில் வசித்தவர் கண்ணன், முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி குணவதி. முதல் மகன் சந்தோஷ்குமார் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்கிறார். மற்றொரு மகன் விஷ்ணு வேலையில்லாமல் இருக்கிறார்.
கண்ணனுக்கு குடி பழக்கம் இருந்ததால், தினமும் இரவில் குடித்து வந்து மனைவி மற்றும் மகன்களோடு சண்டை போடுவார். இந்நிலையில், கடந்த, 12-ம் தேதி இரவு கண்ணன் திடீரென இறந்தார். அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாகக் கூறிய அவரது குடும்பத்தினர், அவரது உடலை அடக்கம் செய்யத்தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது சாவில் மர்மம் இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார் , கண்ணனின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, கண்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, கண்ணன் தனது பென்ஷன் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் தினமும் குடித்து வந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் இதேபோல சண்டை நடந்த போது, ஊதுகுழல் மற்றும் உருட்டுக் கட்டையால் அவரது மனைவியும், மகன்களும் கண்ணனை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். விசாரணையில் இதனை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர் என்றார்.
இதையடுத்து, போலீசார் அவர்கள் மூன்று போரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி , கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.