கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறி அதை திரும்ப பெறக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் முன்பாக போராட்டம் நடந்தது.
இது குறித்து மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் கரு.நாகராஜன் கூறும்போது, ''கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். மேலும் கேள்வித்தாள் உள்ளிட்டவைக்கும் செலவு அதிகமாகிறது. எனவே தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்கள் உயர்த்த அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மாநில உயர்கல்வி மன்ற கூட்டம் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. உடனடியாக விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications