3 நிமிடம் துடித்து அடங்கிய சுவாதி.. கொலையை நேரில் பார்த்தவரின் நெஞ்சை உருக்கும் அனுபவம்
சென்னை: சுவாதியை கொலை செய்த போது சுமார் 150 அடி தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சக ரயில்வே பயணி ஒருவர் நடந்த அந்த கொடூரத்தை நொடிக்கு நொடி விவரித்து தெரிவித்துள்ளார். படிப்போர் மனதை பதறச் செய்யும் காட்சிகள் அவை.
வண்டலூர் பகுதியில் பணியாற்றும் தமிழரசன் கொலையை நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர். துணிச்சலாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க முன்வந்துள்ளார்.
சுவாதியை போலவே நுங்கம்பாக்கம் தினமும் ரயில் நிலையத்தை பயன்படுத்துபவர் தமிழரசன். 15 நாட்களுக்கு முன்பு, சுவாதியை ரயில் நிலையத்தில் வைத்து ஒருவர், கன்னத்தில் அறைந்தார். அப்போது சுவாதி அதை எதிர்க்கவில்லை. அந்த நபரும், கொலையாளியும் ஒரே போன்ற உருவ அமைப்பில் இருந்தனர் என்று போலீசில் தமிழரசன் நேற்று கூறியிருந்தார்.

கொடூர அனுபவம்
இந்நிலையில், ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழரசன், அந்த கொடூர சம்பவத்தை அணு அணுவாக விவரித்து தெரிவித்துள்ளார். இளகிய மனம் கொண்டவர்கள், சம்பவம் பற்றி, படித்தாலே பதறும் அளவுக்கு உள்ளது அந்த தகவல்கள்.

மரண ஓலம்
நானும், பிற பயணிகளை போல செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ரயிலுக்காக தண்டவாளத்தை பார்த்தபடி நடைமேடையில் காத்திருந்தேன். அப்போது, சதையில் அரிவாளால் வெட்டினால் எழும், சதக்.. சதக்.. என்ற சத்தமும், மரண வாதையில் ஒரு பெண் ஓலமிடும் சத்தமும், கேட்டது.

3 நிமிட போராட்டம்
சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தபோது, கழுத்தில் இருந்து ரத்தம் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்த நிலையில், அப்படியே நிலை தடுமாறி, சுவாதி கீழே விழுந்தார். அவரது தலையும், மூட்டுக்களும் அவ்வப்போது அசைந்தன. சுமார் 3 நிமிடங்களுக்கு இவ்வாறு அசைந்தன. பிறகு அப்படியே அசைவற்று போனது.

முடிந்தது
ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் உடலை பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். 5 நிமிடம் கழித்து, எனது அருகே நின்று கொண்டிருந்த பெண் "போயிடுச்சிப்பா" என்று சொல்லியபோதுதான், சுய நினைவு வந்ததை போல உணர்ந்தேன்.

ஓடினான்
கொலையாளி தப்பியோடியபோது, இருவர் அவனை விரட்டினர். கற்களை தூக்கி அவன் மீது எறிந்தனர். இருப்பினும் அவன் தப்பியோடினான். ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. இருப்பினும், தன்னை காப்பாற்றிக்கொள்ள, அந்த தண்டவாளத்தில் இறங்கி அதை தாண்டி தப்பியோடினான். இவ்வாறு தமிழரசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications