"சின்னம்மா" பதவி... சமூக வலைதளங்களில் சசிகலா, தீபா, செளமியா அன்புமணியை மோதவிடும் ஆதரவாளர்கள்!
சமூக வலைதளங்களில் சின்னம்மா என்ற பெயரில் சசிகலா, தீபா, செளமியா அன்புமணி ஆதரவாளர்கள் ஏகப்பட்ட பக்கங்களை உருவாக்கி உள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் சசிகலா, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அன்புமணியின் மனைவி செளமியா ஆகிய 3 பேரின் ஆதரவாளர்களுமே 'சின்னம்மா' உரிமை கோரி ஃபேஸ்புக் பக்கங்களை தொடங்கியுள்ளதால் சமூக வலைதளங்கள் ரணகளமாகி கிடக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது உதவியாளர் விகே சசிகலா, 'சின்னம்மா'வாக உருவாக்கப்பட்டார். ஆனால் அதிமுக தொண்டர்களோ ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைத்தான் 'சின்னம்மா' என அழைத்து வருகின்றனர்.
சின்னம்மா பேரவை
சமூக வலைதளங்களிலும் சசிகலா, தீபா ஆகியோருக்கு ஆதரவாக பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஃபேஸ்புக்கில் சின்னம்மா பேரவை, சின்னம்மா தீபா சின்னம்மா, குவைத் சின்னம்மா பேரவை என போட்டி போட்டுக் கொண்டு பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சின்னம்மா பாசறை
சின்னம்மா தொண்டர் படை என்ற பக்கம் கூட உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னம்மா பாசறை, சின்னம்மா புரட்சி படை, தியாகச் செம்மல் சின்னம்மா என ஏகப்பட்ட பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சின்னம்மா செளமியா
இந்த சின்னம்மா சரண கோஷத்தில் பாமக எம்பி அன்புமணியின் மனைவி செளமியாவும் சேர்க்கப்பட்டுள்ளார். பசுமை நாயகி , பசுமை இளவரசி" சின்னம்மா சௌமியா அன்புமணி என்ற பெயரிலும் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் பேரவை
சின்னம்மா களேபரம் இப்படி வெடித்துக் கொண்டிருக்க சப்தமே இல்லாமல் 'அம்மாவின் விசுவாசி ஓபிஎஸ் பேரவை' என்ற பெயரிலும் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் சசிகலாவுக்கு எதிரான கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.