நேரு பிறந்த நாளில் ஒன்றாக இணைந்த 'காங்கிரஸ் கோஷ்டிகள்"
சென்னை: நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜஹவர்லால் நேருவின் 125வது பிறந்த நாளை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடினர்.
சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேரு படத்துக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் உறுதி மொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.ஆரூண், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, வசந்தகுமார், செல்லக்குமார், கராத்தே தியாகராஜன் என அனைத்து கோஷ்டிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ஆசியாவின் ஜோதி, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக நாடு முழுவதும் பாரதிய ஜனதா கொண்டாடி இருக்க வேண்டும் என்றார்.
வாசன் கட்சி
சென்னை ஆழ்வார்பேட்டை நாகேஸ்வரராவ் பூங்கா அருகே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நேருவின் படத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications