வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்: ராஜேஷ் லக்கானி
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக நாளை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார். இதில் தேர்தல் பாதுகாப்புக்கு தேவையான துணை ராணுவ வீரர்களின் எண்ணிக்கை, வாக்குச் சாவடிகளில் செய்து தரவேண்டிய வசதிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ராஜேஷ் லக்கானி கூறினார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்து போனவர்களின் பெயர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருந்த பெயர்கள் நீக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் போலி வாக்காளர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராஜேஷ் லக்கானி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேர்க்கப்பட்டிருந்த பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் என இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
சுமார் 62 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஒரே வாக்குச்சாவடியில் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 62 ஆயிரம் மாற்றத் திறனாளிள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஒரே வாக்குச்சாவடியில் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.
சட்டசபைத் தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.