சென்னை விமான நிலையத்தில் 34 வது விபத்து: இம்முறை மேற்கூரை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் 34 முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச விமான நிலையமான சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் திறந்த நாள் முதல் இன்று வரை மாயாஜாலப் படங்களில் வருவது போல அவ்வப்போது விசித்திர காட்சிகள் தென்படும் இடமாகி விட்டது.
திடீரென, விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழும், மறு பக்கம் திரும்பி பார்த்தால், கண்ணாடிகள் உடைந்து பொலபொலவென கொட்டும். கடந்த 2013ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் இந்த திகில் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ஒவ்வொரு தடவையும் டைவ் அடித்து தப்பித்துக் கொள்ளும் பயணிகள், பாதுகாப்பாக சூட்கேஸை தலைக்குமேல் தூக்கிப் பிடித்தபடி, விமான நிலைய அதிகாரிகளை தேடிச் சென்று புகார் தெரிவித்தால் அதிகாரி, அமைதியாக புன்னகைக்கிறார்.

பன்னாட்டு விமானநிலையம்
சென்னை விமான நிலையத்தில், புதிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள், 2,015 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.

பலகோடி செலவு
பல ஆயிரம் கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவதும், டைல்ஸ் கற்கள் பெயர்ந்து விழுவதும், மேற்கூரை இடிந்து விழுவதும் வாடிக்கையாக உள்ளது.

அடிக்கடி விபத்துக்கள்
மே மாதம் புதிய உள்நாட்டு விமான முனையத்தில், மேற்கூரை தகடுகள் விழுந்து நொறுங்கின. இதைத் தொடர்ந்து, புதிய பன்னாட்டு மற்றும் பழைய பன்னாட்டு விமான முனையங்களில், மேற்கூரை சரிந்து விபத்துக்கள் ஏற்பட்டன.

பயணிகள் பாதிப்பு
2 முனையங்களிலும் திடீர் திடீரென இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுவரையில் பயணிகளுக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாத வகையில் விபத்துகள் நடந்துள்ளன.

இடிந்த மேற்கூரை
இந்த நிலையில் 34வது முறையாக உள்நாட்டு விமான நிலையத்தில் அதிகாலை 5 மணி அளவில் மேற்கூரை இடிந்து விழுந்தது. பயணிகளின் பொருட்களை எடுத்து செல்லக் கூடியது லக்கேஜ் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்த அதிர்வில் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்தது.

விபத்து தவிர்ப்பு
அந் நேரத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது சென்னை விமான நிலையத்தில் நடந்த 34-வது சம்பவமாகும். தரமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற் கொள்ளாததால் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அச்சத்தின் பிடியில்
சர்வதேச தரத்திற்கு கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய விபத்துகளால் பயணிகள் மட்டுமின்றி அங்கு பாதுகாப்பில் இருக்கும் ஊழியர்கள், தொழிற் பாதுகாப்பு படையினர் அச்சத்தில் உள்ளனர்.

தரமான பொருட்களா?
புதிய வசதிகளுடன் கட்டப்பட்ட விமான நிலையத்தில் பயன்படுத்தப்பட்டவை தரமான பொருட்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரை மற்றும் கண்ணாடி தொடர்ந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications