ஆளுங்கட்சியினரின் குட்டை உடைத்ததால் திமுக வேட்பாளர் மாறன் மீது பொய் புகார்: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடத் தயாராகிவிட்டது போலத் தோன்றுகிறது. இதுவரை எந்தவொரு சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 52 பேரை அதிமுக நியமித்தது இல்லை.
இதில் 31 அமைச்சர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்டோபர் 5-ஆம் தேதி முதல் சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
ஆனால் ஏற்காடு தொகுதியின் தும்பல், பாப்பிநாயக்கன்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்பட பல கிராமங்களில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியோடு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இது தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் மீறிய செயலாகும்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே அமைச்சர் ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு வாகனத்தில், தேசியக் கொடியைப் பறக்கவிட்டபடி பயணம் செய்துள்ளார். இது தொடர்பாக தமிழகத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு தரப்பட்டு, அவரும் 48 மணி நேரத்தில் விளக்கம் கோரிப் பெற்றுள்ளார்.
ஆளுங்கட்சியின் மீது இவ்வாறு ஆதாரத்தோடு புகார் கூறியதால், திமுக வேட்பாளர் மாறன் மீது வாழப்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகப் புகார் கொடுத்துள்ளனர். 10 வாகனங்களுடன் மாறன் சென்றதாக கிராம நிர்வாக அதிகாரி புகார் தாக்கல் செய்துள்ளார். ஆனால் 10 வாகனங்களுடன் அவர் சென்றதற்கான ஆதாரம் எதையும் கிராம நிர்வாக அதிகாரி தரவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளரே கூறியுள்ளார். இதிலிருந்தே ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அக்டோபர் 24-ஆம் தேதி மாறன் வாக்கு சேகரிக்கச் சென்றபோது மக்கள் மத்தியில் எழுந்த வரவேற்பைக் கண்டு உண்மைக்கு மாறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications