செளதியில் 6 மாதமாக உணவு, ஊதியமின்றி கொத்தடிமைகளாக தத்தளிக்கும் 61 தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை
ராமநாதபுரம்: செளதியில் 6 மாத காலமாக உணவு, ஊதியமின்றி கொத்தடிமைகளாகத் தவிக்கும் 61 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது உறவினர்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 61 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் செளதி அரேபியாவில் உள்ள அல்ஜூபைல் நகரில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை தனியார் நிறுவனத்தினர் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர். மேலும் சரியான உணவு கொடுக்காமல் அவர்களை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் தெரிகிறது.

கடந்த 6 மாதமாக 61 மீனவர்களுக்கும் எந்தவித ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் மீனவர் குடும்பத்தினர் வறுமையில் வாடி தவிக்கிறார்கள்.
61 மீனவர்களையும் மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி, ராமநாதபுரம் மாவட்டத்தின் 7 கிராம பொதுமக்களும், மீனவ குடும்பத்தினரும் இன்று மாவட்ட ஆட்சியர் நடராஜனை சந்தித்து மனு கொடுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை சகாயம் ஆதரவாளர்கள் அமைப்பான மக்கள் பாதை செய்திருந்தது.













Click it and Unblock the Notifications